தொகுதி மறுவரையறை மசோதா: திமுக வெளிநடப்பு செய்தால் ஆதரவாகவே கருதப்படும் – அமைச்சர் நிர்மல்குமார்
மதுரையை குப்பையில்லா நகரமாக மாற்றும் நோக்கில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அமைச்சர் நிர்மல்குமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு அரசியல் காரணங்களுக்காகவே தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தமிழகத்தின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாகவும், இதனால் தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை மசோதா
மேலும், தொகுதி மறுவரையறை மசோதாவை அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர், திமுக இந்த மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருப்பதாக கூறினார்.
திமுக வெளிநடப்பு செய்தால், அது மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாகவே பொருள்படும் என்றும், அவ்வாறு செய்வது தமிழகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் செய்யப்படும் மிகப்பெரிய துரோகம் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் விமர்சித்தார்.
மேலும், திமுக தனது குடும்ப நலனுக்காக தமிழகத்தின் நலன்களை பாஜகவிடம் அடகு வைக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சட்டப்பேரவையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், அனைத்துக் கட்சிகளுக்கும் இந்த விவகாரம் தொடர்பாக தெளிவு இருப்பதாகவும், எனவே புதிதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.