விவசாயிகளின் ஓட்டுகள் அனைத்தும் தி.மு.க.வுக்கு கிடைக்காது - முதல்வர் எடப்பாடி
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே, அ.தி.மு.க வேட்பாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வத்தை ஆதரித்து தமிழக முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, "மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்தார்கள். விவசாயிகளின் பாதிப்பை உணராமல் அவர்களது நிலங்களை பிடுங்கி தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி செய்தார்கள்.
அப்போது, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றாமல் விவசாயிகள் பாதுகாக்கப்பட்டனர். ஸ்டாலின் விவசாயிகளின் நிலத்தை பறிக்க முயற்சி செய்தார். அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றியவர் இந்த பழனிசாமி. ஸ்டாலினுக்கு விவசாயிகளைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் கவலை கிடையாது.
எனவே, ஸ்டாலினுக்கு விவசாயிகளின் ஓட்டு கூட கிடைக்காது. 2010 காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வந்தது. அதன்பின், ஜெயலலிதா நீட் தேர்வை தடுக்க கடுமையான முயற்சி செய்தார்கள். தற்போது, நீதிமன்ற உத்தரவின்பேரிலேயே நீட் தேர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு கூடாது என்பது அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.
இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு தி.மு.க. அரசு. கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருகிறது. பல்வேறு துறைகளில் விருதுகளை வாங்கி இருக்கிறது"