காங்கிரஸிற்கு தொகுதி ஒதுக்கியதால் தீ குளிக்க முயன்ற திமுக தொண்டர்: அறந்தாங்கியில் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி தொகுதி, காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுவதாக தகவலால் திமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியை கடந்த காலங்களில் திமுக, தனது கூட்டணி கட்சிக்கே ஒதுக்கிவந்தது.
ஆனால் இம்முறை திமுகவே போட்டியிட வேண்டும் என கட்சியினர் வலியுறுத்துகின்றனர். இதற்காக அறந்தாங்கி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 57 பேர் விருப்பமனு அளித்துள்ளனர். இந்த நிலையில் அறந்தாங்கி தொகுதி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்வதாக வந்த தகவல் வெளியானது.
இதனால் கோபமடைந்த திமுகவினர் பேருந்து நிலையம் அருகே திரண்ட திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த கூட்டத்தில் பங்கேற்ற திமுக தொண்டர் ஒருவர் திடீரென்று தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.