காங்கிரஸ் பங்கேற்கும் இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் - திமுக அதிரடி!
சென்னை: நீட், சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடி, பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் ஜூன்.8ம் தேதி இந்தியா கூட்டணி கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.ஆனால், இந்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று திமுக அதிரடியாக அறிவித்திருக்கிறது. சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது.
இது திமுக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் எனவே இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாகவும் திமுக அறிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக திமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்.,
“டெல்லி “கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்” வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் “இந்தியா" கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு வருமாறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, அவசர அவசரமாகத் தேர்தல் நேரத்தில் திணிக்கப்பட்ட SIR, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே நாடு ஒரே தேர்தல், வக்ஃபு சட்டம், FCRA சட்டத் திருத்தம் உள்ளிட்ட - ஜனநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அனைத்திற்கும் தொடக்கம் முதலே, முதல் அரசியல் இயக்கமாகத் துணிச்சலுடன் எதிர்த்து நின்றது.
அதற்கான நடவடிக்கைகளை ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்திலும், ஆட்சியில் இருந்த நேரத்தில் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் உரிய நேரத்தில் நீதிமன்றங்களிலும் எடுத்து வைத்து வாதாடியும், போராடியும் வந்திருக்கிறது.

“இந்தியா" கூட்டணி தொடங்கியதிலிருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கியது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்சினைகளில் முதன்மைக் குரல் எழுப்பி எழுப்பி வந்தார்.
இது இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும், அக்கட்சிகளின் தலைவர்களும் நன்கு அறிவார்கள். தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் கட்சி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் “இந்தியா" கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.