"ஆளுநர் ரவி தமிழகத்திற்கு தேவையில்லை; அவர் பதவி விலக வேண்டும்" - திமுக எம்.பி டி.ஆர் பாலு பரபரப்பு பேட்டி
'ஆளுநர் ரவி தமிழகத்திற்கு தேவையில்லை; அவர் பதவி விலக வேண்டும்' என திமுக எம்.பி டி.ஆர் பாலு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
நீட் விலக்கு மசோதா தொடர்பாக வலியுறுத்தவும் மற்றும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை
தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு சந்திக்க முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், அனைத்து கட்சி எம்.பி.க்களை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா மறுத்து விட்டார்.
அதேபோல இன்று மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, "தமிழக அரசு நிறைவேற்றிய நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை ஆளுநர் இதுவரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை. இது அரசியல் சட்டத்திற்கு புறம்பானது. ஆளுநர் அரசியல் சட்டத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்.
மேலும் நீட் தேர்வுக்கு எதிரான மசோதா மீது நடவடிக்கை எடுக்கக் கோருவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க முயன்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி தராமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
கடந்த 9 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு இருந்தும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முடியாமல் தமிழ்நாடு எம்.பி.க்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக அனைத்து கட்சி எம்பி களை சந்திக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அனைத்து கட்சிகளை அரசியல் காரணமாக அமித்ஷா சந்திக்க மறுப்பதாக நினைக்கிறேன்" என்றும் கூறினார்.
மேலும் "நீட் தேர்வுக்கு விலக்கு தொடர்பான சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை உள்துறை அமைச்சருக்கு அனுப்பாத ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்திற்கு தேவையில்லை.
நீட் தொடர்பான மசோதா நிலுவையில் இருப்பதற்கு காரனம பொறுப்பு ஆளுநர் தான். சட்டத்தை மதிக்காத அவர், உடடியாக பதவி விலக வேண்டும்" எனத் தெரிவித்தார்.
தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும் என மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு `கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.