இதுதான் உங்கள் வீரமா? முதல்வர் விஜய்க்கு ஆ.ராசா கேள்வி
உங்க சக்தி பிரதமர் முன்னாடி எங்க ப்ரோ போச்சு என முதல்வர் விஜய்யை திமுக எம்.பி ஆ.ராசா விமர்சித்துள்ளார்.
முதல்வர் விஜய்யை விமர்சித்த ஆ.ராசா
திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நேற்று திருச்சி கிழக்கில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் பேசிய முதலமைச்சர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆ.ராசா, "தான் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்குப் பொருத்தமானவராக இல்லாமல், தன் தகுதியைக் குறைத்துக்கொண்டு வீர வசனம் பேசிக்கொண்டிருக்கிறார் விஜய்.

சட்டமன்றத்தில் பதிலுரை ஆற்றிய விஜயின் குரல் வலிமையையும், திருச்சியில் அவர் பேசிய உரையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஏன் சட்டமன்றத்தில் தளர்வு, சோர்வு, தயக்கம், இயலாமை? திருச்சியில் இந்த வீர வசன உரையை எழுதிக்கொடுத்தது யார்?
அதிமுக உள்ளிட்ட சில கட்சிகளை அல்லுசில்லு என்று சொல்கிறார் முதலமைச்சர் விஜய். ஆனால், இந்த அல்லுசில்லு கட்சிகளிடம் போய்க் கெஞ்சினீர்களே, இது தில்லுமுல்லா அல்லது அரசியல் அநாகரிகமா?
நீங்கள் சொல்லும் ஸ்டாலின் சார்தான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அரசியல் சட்டத்தையே மீறியவர். இதுதான் அவரது வீரம். அரசியல் சட்டத்தை மீறினால் ஆட்சியையே கலைக்கலாம். நாங்கள் மீறியிருக்கிறோம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக.
ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்துக்காக நீங்கள் போய்க் கெஞ்சி இருக்கிறீர்கள். இதுதான் உங்கள் வீரமா? விஜய் ப்ரோ, உங்க சக்தி பிரதமர் முன்னாடி எங்க ப்ரோ போச்சு?
6 மாதத்திற்கு உங்களது இயலாமையை தான் விமர்சிக்க மாட்டோம்னு சொன்னோம். பணம் இல்லை நிதிநிலை சரி ஆக 6 மாதம் ஆகலாம். சட்ட ஒழுங்குக்கு என்ன பிரச்சினை? காவல்துறை உங்க கைல தானே இருக்கு.
திருவள்ளுவருக்கு ஆளுநர் காவிச் சாயம் பூசியிருக்கிறார். உங்கள் பாசிசம் என்ன ஆயிற்று, விஜய் ப்ரோ? இதைப்பற்றி எப்போது பேசுவீர்கள்? பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என இலச்சினை போட்டுகிட்டேன் மட்டும் பத்தாது.
எங்க மொழியை, இனத்தை தாழ்த்துகிற ஒருவரை கேள்விகேட்க கண்டிக்கத் துப்பில்லாத ஒரு சக்தி எங்களை பார்த்து தீயசக்தி, தூர சக்தி என சொல்விங்களா? நீங்க 'நாரசக்தி' என்று நாங்கள் கேட்கமாட்டோமா? என பேசியுள்ளார்.