ஏமாற்றுவது மட்டும் தான் திமுகவின் வேலை - எல்.முருகன் குற்றச்சாட்டு
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவாக உள்ள நிலையில் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. திமுகவும், அதிமுகவும் மாறி மாறி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். நேற்று திருச்சியில் நடத்த திமுக பொதுக் கூட்டத்தில் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் தமிழகத்திற்கு செய்ய வேண்டிய ஏழு வாக்குறுதிகளை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே விவசாயக் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல அறிவிப்புகளை முதலில் ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது அறிவித்தார். அந்த அறிவிப்புகள் பலவற்றை தமிழக அரசே செயல்படுத்தியது. இதைத் தொடர்ந்து, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என ஸ்டாலின் ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.
இது இல்லத்தரசிகள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், மாதந்தோறும் ரூ.1000 வழங்குவது எப்படி சாத்தியாமாகுமென எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அந்த வகையில், திமுகவின் அறிவிப்புகள் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ”திமுக அறிவிப்பு எல்லாம் ஏமாற்று வேலை. திமுக அறிவித்த எழில்மிகு மாநகர் திட்டம் ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டமாக உள்ளது. மத்திய அரசின் திட்டங்களை விஷன் 7 என ஸ்டாலின் கூறி வருகிறார் என விமர்சித்தார்.
இதையடுத்து, விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தரப்படும் என கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? இந்த நிலங்கள் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. திமுகவினரே ஆக்கிரமித்து கொண்டனர். குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 தரப்படும் என்ற அறிவிப்பை எப்படி நிறைவேற்றுவார் என சரமாரியாக கேள்விகளை எழுப்பிய அவர், ஏமாற்றுவதற்கு திமுகவிடம் இருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்