“ஆடத் தெரியாதவர் மேடை கோணல் என்று சொன்னது போல...” - பிடிஆரை விமர்சித்த அண்ணாமலை
ஜிஎஸ்டி வரிவித்திப்பு குறித்து திமுகவினர் பொய்களை கட்டவிழ்த்து விடுகின்றனர் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு
சென்னையில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், தமிழகத்திற்கான ஜிஎஸ்டி தொகை முற்றிலுமாக தரப்பட்டுவிட்டது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சு 2 நாட்களாக அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பிராண்ட் உணவு பொருள் மீதான வரி குறித்து திமுகவினர் பல பொய்களை கட்டவிழ்த்து விடுகின்றனர். மாநில நிதி அமைச்சரின் நேற்றைய அறிக்கை முன்னுக்கு பின் முரணாக இருந்தது.
உத்தரபிரதேசம், குஜராத்தை விட தமிழ்நாட்டில் பெட்ரோல்,டீசல் விலை அதிகமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கும் போது மாநில அரசு குறைக்காமல் குறை கூறுவது ஏற்புடையதல்ல.
4.079 சதவீதம் மட்டுமே மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு ஜிஎஸ்டி பகிர்வு வந்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் தவறான தகவலை தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி கவுன்சில் 56 பரிந்துரையும் ஏக மனதாக ஏற்ற பிறகே வரி அமலானது.
தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற முடியாததற்கு மத்திய அரசை எப்படி குறை கூற முடியும் என கேள்வி எழுப்பினார்.