அழாத குழந்தைக்கும் பால் கொடுக்கும் அரசு திமுக அரசு: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150 ஆண்டுகள் பழமையான ஆனைப்புளி பெருக்கமரத்தின் வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த பின்னர் நிகழ்ச்சியில் பேசிய , தனது பிறந்த நாளில் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்தவர் கருணாநிதிஎனக் கூறினார்.
கண்ணொளி திட்டம், சைக்கிள் ரிக்ஷா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அந்த வகையில் நானும் எனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் சென்னையில் உள்ள காது கேளாதோர் பள்ளிக்கு சென்று அவர்களுடன் அமர்ந்து பேசி அவர்களுடன் உணவருந்தி கொண்டாடி வருகிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், வானுயர வள்ளுவருக்கு சிலை வைப்போம். லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை கொடுக்க டைடல் பார்க்கை அமைப்போம். அதே நேரத்தில் ஏழைகளின் பசிக்கும் உணவளிப்போம். மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையானவற்றை வழங்குவோம்.
குடிசை வீடுகளை மாற்றி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என்ற அடிப்படையிலும் பணியாற்றி வருகிறோம். ஒரு வாரம் மட்டும் மக்களை கவனிக்கும் அரசு திமுக அரசு அல்ல. ஏழை, எளிய மக்களை, ஒடுக்கப்பட்ட மக்களை கைதூக்கி விடக்கூடிய அரசு திமுக அரசு என்று கூறினார்.
மேலும், அழாத குழந்தைக்கும் பால் கொடுக்கும் அரசாக திமுக அரசு இருக்கும். அனைவரது கோரிக்கைக்கும் செவி மடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும் என்று தெரிவித்தார்.