பொது சிவில் சட்டத்தை திமுக வலிமையாக எதிர்க்கிறது - இந்திய சட்ட ஆணையத்திற்கு துரைமுருகன் பதில் !

DMK Durai Murugan
By Jiyath Jul 12, 2023 09:58 AM GMT
Report

பொது சிவில் சட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இந்திய சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்பு கடிதத்திற்கு திமுக கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் பதில் எழுதியுள்ளார்.

பொது சிவில் சட்டம்

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, பெரும் ஆர்ப்பட்டங்கள், கண்டங்கள் என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதன் வரிசையில், நல்லாட்சி வழங்க முடியாமல்தான் பொது சிவில் சட்டத்தை பாஜக கையில் எடுக்கிறது என மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்திருந்தார். மேலும், திமுக பொது சிவில் சட்டத்தை மிக கடுமையாக எதிர்க்கிறது. இதனைத்தொடர்ந்து பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி இந்திய சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்பு கடிதத்திற்கு திமுக கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் கடிதம்  எழுதியுள்ளார்.

துரைமுருகன் பதில்

அந்த கடித்ததில் "தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகம், மக்களவையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அத்துடன், சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் இயங்கி வரும் கட்சியாகும்.

பொது சிவில் சட்டத்தை திமுக வலிமையாக எதிர்க்கிறது - இந்திய சட்ட ஆணையத்திற்கு துரைமுருகன் பதில் ! | Dmk Duraimurugan Letter To Lci 90

பகுத்தறிவுக்கு ஒவ்வாத சடங்கு, சம்பிரதாயங்கள், பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள், பிறப்பின் அடிப்படையிலான வேற்றுமைகள் ஆகியவற்றுக்கு எதிரான வலிமையான குரல் எழுப்பி வந்துள்ளது.அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, மந்திரங்கள் ஓதி திருமண செய்யும் முறைக்கு மாற்றாக மக்களின் வாழ்த்துக்களுடன் திருமணம் செய்து கொள்ளும் சுயமரியாதைத் திருமணத்தை சட்டப்படி செல்லத்தக்கதாக்கியது.

சாதி கடந்து அனைத்து மக்களும் சமமாக வாழ்வதற்குரிய “சமத்துவபுரங்கள்” தி.மு.கழக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் பரவலாக அமைக்கப்பட்டன. அதேநேரத்தில், இந்திய மக்கள் பல்வேறு மத, மொழி, இனக் குடும்பமாக, “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற அடிப்படையில் அவரவர் பழக்கவழக்கங்களை அவரவர் பின்பற்றுவதை ஆதரித்து வந்துள்ளது. பிரிவு 25-ன்படி குடிமக்கள் அனைவரும் தாங்கள் சார்ந்துள்ள மத வழக்கங்களைப் பின்பற்றவும், பரப்பவும் உரிமை பெற்றவர்களாவர்.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் “ஒரு நாடு, ஒரு இனம், ஒரு மொழி, ஒரு பண்பாடு” என்ற கொள்கையின் விளைவாக ‘பொது சிவில் சட்டத்தை’ அறிமுகப்படுத்தும் முயற்சியை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது.இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், மதச் சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படுத்துவதுடன், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு, அமைதியின்மை போன்ற பல கேடுகளை இந்திய சமுதாயத்தில் உருவாக்கும் நிலை ஏற்படும்.

பொது சிவில் சட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் வலிமையாக எதிர்க்கிறது. காரணம், இந்தச் சட்டம் தனிநபர் உரிமையான எந்த மதத்தையும் பின்பற்றுதல், வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்றவற்றில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 25 வழங்கியள்ள உரிமைகளை பறிப்பதற்கும், பிரிவு-29 வழங்கியுள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பறிப்பதற்குமான முயற்சியாகும்.

மேலும் அடிப்படை உரிமைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் எந்தச் சட்டத்தையும் தி.மு.கழகம் ஏற்றுக் கொள்ளாது. தமிழக மக்கள் அனைவரும் மதங்களைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். பொது சிவில் சட்டம் இத்தகைய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வாய்ப்பு உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது உலக நாடுகளே வியந்து பாராட்டும் நாடு, நமது இந்திய நாடு என்பதை ஒன்றிய அரசு மறந்துவிடக் கூடாது.

எனவே, 22வது சட்ட ஆணையம் 21வது சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, பொது சிவில் சட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று திராவிட முன்னேற்றக் கழகம் கூறுகிறது என்று அவர் எழுதியுள்ளார்.