41 பேர் இறப்பிற்கு காரணமான விஜய் மனிதாபிமானம் உள்ளவரா? துரைமுருகன் கேள்வி
திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் காட்பாடியில் உள்ள அவரது இல்லத்தில் பேட்டி அளித்தார்.
துரைமுருகன்
இதில், டெல்லி சென்ற செங்கோட்டையன் நான் யாரையும் சென்று சந்திக்கவில்லை என அப்போது கூறவிட்டு, அதிமுகவை விட்டு நீக்கிய உடன், பாஜக தன்னை அழைத்து பேசினார்கள் என தெரிவித்து உள்ளாரே என கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், அதிமுக கட்சி விவகாரம். செங்கோட்டையன் எம்ஜிஆர் காலத்தில் இருந்து இருப்பவர்தான். ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தார் என்று அவருக்குத்தான் தெரியும். உண்மை வெளிவந்து விட்டது என கூறினார்.
மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் நாள்கள் எண்ணப்பட்டு உள்ளது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, அவர் பாவம் நல்ல மனிதர், அங்கு சொல்லிக் கொடுப்பதை சொல்லிவிடுவார் அவ்வளவுதான் என பதில் அளித்தார்.
விஜய் மனிதாபிமானம் உள்ளவரா?
"உச்சபட்ச அதிகாரம் மயக்கத்தில் மனிதாபிமானம் மாண்பு இல்லாமல், சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளாரே என கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், கரூர் சம்பவத்தில் 41 பேர் இறப்பிற்கு காரணமாக இருந்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு சென்று நேரில் பார்க்காமல் இருந்த அவர் மனிதாபிமானம் உள்ளவர், நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவரா? என கேள்வி எழுப்பினார்.
கோடநாடு வழக்கில் என்ன பூச்சாண்டி காட்டினாலும் அதற்கு அஞ்சமாட்டேன் என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேள்விக்கு, "அவருடைய கருத்தை அவர் தெரிவிக்கிறார். ஆனால் சட்டம் என்ன சொல்கிறதோ, அதை தமிழக அரசு கட்டாயம் செய்யும்" என பதிலளித்தார்.