மணிப்பூர் மாதிரி உனக்கும் சேலையை உருவனுமா? - திமுக மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்!
தென்காசி தெற்கு மாவட்ட செயலாளரை மாற்றி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தவறாக பேசிய ஆதரவாளர்கள்
தென்காசியில் திமுக மகளிரணி சார்பில் மணிப்பூர் வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட பெண் சேர்மேன் தமிழ்ச்செல்வியை தென்காசி திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் பேசவிடாமல் தடுத்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் கோபமடைந்த தமிழ்செல்வி "மணிப்பூர் வன்கொடுமையை கண்டித்து போராடுகிறோம், அதற்கும் இங்கு நடப்பதற்கும் என்ன வித்தியாசம்? என்று கோபத்துடன் கேட்டுள்ளார். இதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த சிவபத்மநாதன் ஆதரவாளர்கள் "மணிப்பூர் மாதிரியே உனக்கும் சேலையை உருவனுமா? என்று கேட்டு மிரட்டி சேலையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் பெண் சேர்மேன் தமிழ்ச்செல்வியை மைக்கை பிடுங்கி காவலரை வைத்து கீழே இறக்கிவிட்டுள்ளனர். இதுகுறித்த புகார் திமுக தலைமைக்கு சென்றுள்ளது.
மாவட்ட செயலாளர் மாற்றம்
இந்நிலையில் மாவட்டச் செயலாளராக இருந்த சிவபத்மநாதன் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு சுரண்டை நகரச் செயலாளராக செயல்பட்ட ஜெயபாலன் என்பவரை திமுக தெற்கு மாவட்ட செயலாளராக நியமித்து திமுக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
இது தென்காசி மாவட்ட திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.