திமுகவை கண்டுகொள்ளாத காங்கிரஸ் - கூட்டணியில் விரிசல்?
புதுச்சேரியில் நாளை வேட்புமனுத்தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், இன்னும் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உறுதியாகாமல் உள்ளது.
இழுபறியில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு
30 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நாளை வேட்புமனுத்தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், இன்னும் திமுக காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு முடிவடையாமல் உள்ளது.
கடந்த 2021 தேர்தலில் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் திமுக 9 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
இந்த முறை இரு கட்சிகளும் தலா 14 தொகுதிகளில் போட்டியிடுவது எனவும், மீதமுள்ள 2 தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு வழங்கவும் திமுக திட்டமிட்டுள்ளது.
மேலும், மண்ணாடிப்பட்டு, நெல்லித்தோப்பு, முத்தியால்பேட்டை ஆகிய தொகுதிகளை காங்கிரஸ், திமுக ஆகிய 2 கட்சிகளும் கேட்டு வருவதால் இழுபறி நீடிக்கிறது.

நேற்று தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்காக, புதுச்சேரி திமுக பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையில் திமுக குழுவினர் தனியார் ஹோட்டலில் சுமார் 12 மணி நேரம் காத்திருந்தனர்.
ஆனால் கடைசி வரை காங்கிரஸ் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றதால் திமுக உடனான பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
அவசர ஆலோசனை
திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறிய ஜெகத்ரட்சகன் உடனடியாக புறப்பட்டு சென்னை வந்துள்ளார்.
இன்று முதல்வர் ஸ்டாலினுடன் கூட்டணியில் தொடர்வதா அல்லது தனித்து போட்டியா என்பது குறித்த ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளார்.

தமிழ்நாட்டிலும் இதே போல் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவிய போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆலோசனை நடத்திய பின்னர் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் உடன் பாஜக, அதிமுக, லஜக கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும், அதிமுக 2 தொகுதிகளிலும், லஜக 2 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.
இதே போல், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்குமான தவெக வேட்பாளர் பட்டியலை விஜய் வெளியிட உள்ளார்.