தி.மு.க.வினர் பெட்டிகளை மாற்றி அ.தி.மு.க.வை தோல்வியுற செய்வர் : பழனிசாமி பேச்சு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், இல்லையெனில் தி.மு.க.,வினர் பெட்டிகளை கொடுத்து மாற்றி தோல்வியுற செய்து விடுவார்கள், என்றும், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசியுள்ளார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்.,6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி ஆலோசனை நடத்தினர்.அப்போது பழனிசாமி பேசியதாவது:
உள்ளாட்சித் தேர்தலின் போது அ.தி.மு.க., தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தி.மு.க.,வினர் பெட்டிகளை மாற்றி நம்மை தோல்வியுற செய்து விடுவார்கள். எனவே, தொண்டர்கள் மிகுந்த விழிப்புடனும், கவனமுடனும் செயல்பட வேண்டும்.பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பல வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் ஏமாற்றி விட்டார்.
தேர்தலுக்கு முன் ஆட்சிக்கு வந்த உடனேயே வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் எனக்கூறிவிட்டு, முதல்வராக பதவியேற்ற பின் 5 ஆண்டுகளில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கூறுகிறார். அ.தி.மு.க., பொறுப்பாளர்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தொண்டர்கள் அனைவரும் அ.தி.மு.க., வெற்றிக்காக இரவு - பகல் பாராமல் கடுமையாக உழைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும். 9 மாவட்டத்திலும் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க., வெற்றிப்பெற்றது என்ற செய்தி நமது காதில் வந்து விழவேண்டும். என அவர் பேசினார்.