நன்றி சொல்ல சென்ற மு.க.ஸ்டாலின் - கதறி அழுத தொண்டர்கள்
கொளத்தூரில் வாக்காளர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி சொல்ல சென்ற நிலையில், தோல்வியை தாங்க முடியாத தொண்டர்கள் கதறி அழுதனர்.
நன்றி சொல்ல சென்ற மு.க.ஸ்டாலின்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதில் திமுக 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பலரும் தோல்வியை தழுவியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, தனது ராஜினாமா கடிதத்தை தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு அனுப்பினார். அவரது கடிதத்தை ஏற்பதாக ஆளுநர் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை. நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம்.
வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை?" என தெரிவித்தார்.
கதறி அழுத தொண்டர்கள்
இதனையடுத்து, வாக்களித்த கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று வாகனத்தில் கொளத்தூரில் ரோடு ஷோ சென்றார்.

அங்கு குவிந்த திமுக தொண்டர்கள் சாலையின் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி வரவேற்றனர்.
தோல்வியை தாங்க முடியாத தொண்டர்கள் பலரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். யாரும் அழுக வேண்டாம் என மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மு.க.ஸ்டாலின் உடன் வந்திருந்த முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவும் கண் கலங்கினார்.