அடிப்படை வசதி கேட்ட இளைஞரை: கண்மூடித்தனமாக தாக்கிய திமுக துணைச் சேர்மன்

By mohanelango Apr 26, 2021 11:51 AM GMT
Report

அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை வைத்த இளைஞர் ஒருவரை கண்மூடித்தனமாக தாக்கும் திமுக ஒன்றிய துணைச் சேர்மன்.

சாலை மின்விளக்கு ஏற்படுத்தித் தருவதாக கூறி ஓட்டு வாங்கி விட்டு தற்போது தங்கள் வீட்டு பகுதிக்கு மட்டும் வசதி செய்து கொண்டது ஏன் எனக் கேட்ட இளைஞர் ஒருவரை பணம் வாங்கிக் கொண்டு தானே ஓட்டுப் போட்ட இப்போது உன்னால் என்ன செய்ய முடியும் போடா என தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இளைஞரை தாக்கியது தொடர்பாக திமுக ஒன்றிய துணைத் தலைவர் மீது ராஜபாளையம் காவல் நிலைய போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழபாட்டகுளம், கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த துரை. கற்பகராஜ் என்பவர் திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது ஒன்றிய துணைச் சேர்மனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கீழ பாட்டகுளம் கரிசல்குளம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் போது தங்கள் பகுதிக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தித் தருமாறு வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றபின் அப்பகுதிக்கு எந்த அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஊரக வளர்ச்சி துறைக்கும் மாவட்ட ஆட்சி தலைவருக்கும் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் கவுன்சிலராக வெற்றி பெற்று தற்போது ஒன்றிய துணைச் செயலாளராக இருக்கும் துரை.கற்பக ராஜ் தான் வசிக்கும் பகுதிக்கு மட்டும் உயர்மின் கோபுர விளக்குகள் சாலை வசதிகள் ஏற்படுத்தியுள்ளார்.

எங்கள் பகுதிக்கும் இதுபோல சாலை மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் எனக் கேட்டு சென்ற பொதுமக்களை உதாசீனப்படுத்தி காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டீர்கள் உங்கள் பகுதிக்கு நான் ஏன் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் எனக் கூறி கரிசல்குளம் பகுதி மக்களை திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் தன் மீது அடிக்கடி புகார் மனு அனுப்பும் பகத் சிங் என்பவர் நியாய விலை கடை பொருட்கள் வாங்க வந்தபோது அப்பகுதிக்கு வந்த திமுகவைச் சேர்ந்த துணைச் சேர்மன் துரை.கற்பகராஜ் தகாத வார்த்தைகளால் திட்டி பொது மக்கள் முன்னிலையிலேயே அவரைத் தாக்கியுள்ளார்.

இது குறித்து பகத் சிங் ராஜபாளையம் ஊரக காவல் நிலையத்தில் புகார் மனு அளித்ததை தொடர்ந்து துரை.கற்பகராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடிப்படை வசதி கோரி மனு அளித்த தன்மீது தாக்குதல் நடத்திய திமுக ஒன்றிய சேர்மன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பகுதி மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது