திமுக கொடிகம்பத்தால் உயிரிழந்த சோகம்- அடுத்த பலி
விழுப்புரம் அருகே திமுக கொடி கம்பம் ஊன்றிய 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தர அமைச்சர் க.பொன்முடிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அமைச்சரின் வருகைக்காக சாலையோரத்தில் திமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டன. இதில் கொடிக்கம்பம் அமைக்கும் பணியில் வெங்கடேசன் என்பவர் பணியாற்றி வந்தார். உதவிக்காக பக்கத்து வீட்டில் உள்ளவரின் 13 வயது மகன் தினேஷ் என்ற சிறுவனை அழைத்து சென்றுள்ளார்.
அப்போது கட்சிக் கம்பம் ஊன்றியபோது உயர்மின் கம்பி உரசி சிறுவன் தூக்கி வீசப்பட்டான். இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்துள்ளனர். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி பலியானான். இது குறித்து சிறுவனின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து சிறுவனின் மரணத்தை சந்தேக மரணம் என போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் 13 வயது சிறுவனை தொழில் செய்ய அழைத்து சென்ற வெங்கடேசனிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சிறுவன் உயிரிழப்பிற்கு அமைச்சர் பொன்முடி பொறுப்பேற்க வேண்டுமென்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்