“திமுகவையும் திரைத்துறையையும் பிரிக்கமுடியாது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
திமுகவையும் திரைத்துறையையும் பிரிக்க முடியாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுது போக்கு மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 300க்கும் மேற்பட்ட திரை பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், இயக்குநர் ராஜமௌலி, நடிகர்கள் ஜெயம்ரவி, ஜெயராம், ரமேஷ் அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர்,
தொழில்துறையில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற அடிப்படையில் துபாய்க்கு சென்று வந்ததாகவும் மாநிலத்தின் உரிமைகளை உரிமையோடு கேட்க வேண்டும் என்பதன் அடிப்படையில் 3 நாள் பயணமாக தலைநகரம் டெல்லிக்கு சென்று வந்ததாகவும் தெரிவித்தார்.
“முதலமைச்சராக நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தாலும் ஒரு காலத்தில் திரைப்பட தயாரிப்பில் இருந்தவன் நான். ஒருசில படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் எழுதியுள்ள உங்களில் ஒருவன் புத்தகத்தில் இதை குறித்து எழுதியிருக்கிறேன்,..திமுகவையும் திரைத்துறையையும் பிரிக்கமுடியாது என்று.
திரைத்துறையில் முத்திரை பதித்த மாநிலம் தமிழ்நாடு. திரைப்பட விருதுகள் மூலம் தகுதியானவர்கள் பாராட்டப்பட வேண்டும். திறமைசாலிகள் மதிக்கப்பட வேண்டும். கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு, திரையுலகம் மீண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “ திரையுலகிற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. குட்கா, கஞ்சா குறித்த விழப்புணர்வு வாசகங்களை படங்கள் திரையிடும்போது வெளியிட வேண்டும்.
சமூகத்துக்கு பயன் அளிக்கக்கூடிய முற்போக்கான திரைப்படங்களை எடுக்க வேண்டும். பொழுதுப்போக்கு ஊடகம் என்ற நிலை மாறி சிந்தனைக்கான ஊடகம் என்ற நிலையை நோக்கி ஊடகங்கள் வளர வேண்டும்” என உரையாற்றினார்.