இழுபறியாக உள்ள தொகுதி பங்கீடு; தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி - தவெக உடன் பேச்சுவார்த்தையா?
திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி நிலவி வரும் நிலையில், தவெக தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் தீவிரமாக உள்ளன.

ஆளும் திமுக கூட்டணியில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆகிய கட்சிகள் உள்ளது.
இதில், முக்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள், ராஜ்ய சபா சீட் கேட்பதால் கூட்டணியில் சிறு உரசல் நிலவி வருகிறது.
கடந்த 22 ஆம் தேதி சென்னை வந்த காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்த காங்கிரஸ் தலைமையின் கடிதத்தை வழங்கினார்.

அதில், ஆட்சியில் பங்கு, 41 சட்டமன்ற தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட், உள்ளாட்சியில் கூடுதல் இடங்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
அதேவேளையில், ஆட்சியில் பங்கு தர முடியாது என்பதில் உறுதியாக உள்ள திமுக, 26 தொகுதிகள் வரை வழங்கவே உள்ளது.
தவெக தரப்பில் பேச்சுவார்த்தை?
சமீபத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், "ஆட்சி அதிகாரத்தை விரும்பாத கட்சி எதுவும் உள்ளதா? நாங்கள் என்ன அறக்கட்டளையா நடத்துகிறோம்.

எங்களுக்கு 12 - 20% வரை வாக்கு உள்ளது. எங்கள் பலத்தை உணர்ந்த தவெக எங்களுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளது" என பேசியுள்ளார்.
இதனால் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி நிலவி வருகிறது. இதனால், தவெக தரப்பிலும் பேசி வருவதாக கூறப்படுகிறது.
தவெக தரப்பில் ஆட்சியில் பங்கு தருவதோடு, காங்கிரஸ் கேட்பதை விட அதிகமான தொகுதிகளை வழங்க தயாராக உள்ளது.
சென்னை வரும் ராகுல் காந்தி
ஜனவரி மாதமே ராகுல் காந்தி சென்னை வருவதாக இருந்த நிலையில், கூட்டணி இறுதி செய்யப்படாததால் அந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் மார்ச் 5 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகளை தராவிட்டாலும் கூட்டணியில் தொடருமா அல்லது தவெக உடன் கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.