முதல்வர் விஜய் தற்போது கர்நாடகா வர வேண்டாம் - டி.கே.சிவகுமார் வேண்டுகோள்
முதல்வர் விஜய் தற்போது கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவேரி விவகாரம்
தமிழ்நாட்டிற்கு, 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், கர்நாடகா நீரை திறக்க மறுத்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் உள்ள விவசாய அமைப்புகள் மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய், ஆகஸ்ட் 3 ஆம் தேதி கர்நாடகாவிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது உள்ள சூழலில் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
காவேரி விவகாரம் தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், "இரண்டு மாநில தலைமைச் செயலாளர்களும் இது குறித்து விவாதித்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சரும் நானும் அவரவர் மாநில நலனில் அக்கறையுடன் உள்ளோம். இரு மாநிலங்களுக்கும் சிக்கல் ஏற்படுத்தாத தீர்வை எட்ட முயற்சிக்கிறோம்.
தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாத சூழல் உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். தமிழ்நாடு முதல்வர் விஜய் வரும்போது போராட்டம் நடந்தால் நன்றாக இருக்காது.
வேறொரு தேதியில் சந்திப்பு கூட்டத்தை நடத்தலாம் என விஜய்க்கு கோரிக்கை வைக்கிறேன். சிறிது காலம் காத்திருக்கலாம். உரிய நேரம் வரும்போது இருவரும் சந்தித்து ஆலோசிப்போம்" என தெரிவித்துள்ளார்.