தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: இரட்டை தங்கம் வென்ற இந்திய வீரர்
தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் திவ்யனாஷ் சிங் பன்வார் இரட்டைத் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
மத்தியபிரதேசத்தில் உள்ள போபாலில் 64-வது தேசிய துப்பாக்கி சுடுதல் (ரைபிள்) சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ராஜஸ்தானை சேர்ந்த 19 வயது திவ்யனாஷ் சிங் பன்வார் இறுதி சுற்றில் 250 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இதேபோல் மகாராஷ்ட்ரா வீரர் ருத்ராங்ஸ் பட்டீல் (249.3 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும், அசாம் வீரர் ஹிரிடா ஹசாரிகா (228.2 புள்ளிகள்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். மேலும், ஜூனியர் பிரிவிலும் திவ்யனாஷ் சிங் பன்வார் 252.2 புள்ளிகள் எடுத்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அவர் ஒரே நாளில் இரட்டை பதக்கங்களை வென்று அசத்தினார்.