பில்கிஸ் பானு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் உத்தரவு
11 பேரின் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11 பேர் விடுதலை
கடந்த 2002ல் கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து நிகழ்ந்த குஜராத் வன்முறை சம்பவத்தின் போது பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு அவரின் குடும்தைச் சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்டனர்.
தண்டனை காலம் முடியும் முன் தங்களை விடுதலை செய்யக்கோரி இக்குற்ற வழக்கில் தண்டனை பெற்று வந்த 11 குற்றவாளிகள் தாக்க செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து பரிசீலனை செய்யுமாறு குஜராத் அரசை கேட்டுக்கொண்டது.

அதை தொடர்ந்து 11 பேரும் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 1992ம் ஆண்டு குஜராத்தில் அமல்படுத்தப்பட்ட சிறைக் கைதிகள் தண்டனை குறைப்பு கொள்கை அடிப்படையில், அவர்கள் விடுவிக்கப்பட்டதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மறுசீராய்வு மனு தள்ளுபடி
11 பேரின் விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 11 பேர் விடுதலையில் உச்சநீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட சட்டத்தின் தேவை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
1992 ஆம் ஆண்டு குஜராத்தில் அமல்படுத்த கைதிகள் தண்டனை குறைப்பு கொள்கை, கடந்த 2003 ஆம் ஆண்டே மாநில அரசு ரத்து செய்துவிட்டது.

அப்படி இருக்கையில் 11 பேரையும் 1992ம் ஆண்டு கொள்கையின்படி விடுவித்தது பொருத்தமானதா என்பதை ஆராய வேண்டிய தேவை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் விக்ரம்நாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பில்கிஸ் பானு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.