இந்திய அணியிடம் அசிங்கப்பட்டோம் : நியூசிலாந்து கேப்டன் வேதனை
இந்திய அணிக்கு எதிரான மிக மோசமான தோல்வி வேதனை அளிப்பதாக நியூசிலாந்து அணியின் தற்காலிக கேப்டனான டாம் லதாம் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டி டிராவில் முடிய இரண்டாவது போட்டி கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி தொடங்கியது.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 325 ரன்களும், நியூசிலாந்து 62 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது. 263 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.
இதனால் 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து வெறும் 167 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி இந்திய அணியிடம் 372 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரைல் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்நிலையில் இந்திய அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டனான டாம் லதாம் இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய அணிக்கு எங்களது வாழ்த்துக்கள், இந்திய அணி இந்த வெற்றிக்கு முழு தகுதியானது. இந்திய வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர். முதல் இன்னிங்ஸில் 62 ரன்களில் ஆல் அவுட்டானது எங்களுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துவிட்டது என லாதம் கூறியுள்ளார்.