இயக்குனர் வம்சி திடீரென மருத்துவமனையில் அனுமதி...! - ‘வாரிசு’ படப்பிடிப்பு நிறுத்தம்
இயக்குனர் வம்சி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘வாரிசு’ திரைப்படம்
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66வது படமான ‘வாரிசு’ திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். ‘வாரிசு’ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார்.
இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், ஷியாம், சரத்குமார், சம்யுக்தா, குஷ்பு, யோகிபாபு உட்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 100 நாட்களை கடந்து நடந்து வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
இயக்குனர் வம்சி திடீரென மருத்துவமனையில் அனுமதி
விறுவிறுப்பாக நடந்து வந்த ‘வாரிசு’ படத்தின் ஷூட்டிங் தற்போது திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் வம்சிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஒரு வாரம் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனராம். இதனால், இயக்குநர் வம்சி தற்போது ஓய்வில் உள்ளாராம். அவர் குணமாகி வந்த பின்னர், படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.