ராஜராஜ சோழன் விவகாரம் : திருமாவளவன் முதலில் என்ன மதம் என கூறுங்கள் .. கொந்தளித்த இயக்குநர் பேரரசு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருவாவளவனின் கருத்து பிற்போக்காக மாறிவிட்டதாக இயக்குநர் பேரரசு விமர்சித்துள்ளார்.
ராஜராஜ சோழன் சர்ச்சை
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜராஜ சோழன் சர்ச்சை எழுந்த போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்து சமய அறநிலையத் துறையை சைவம், வைணவம் என்று இரண்டாக பிரிக்க வேண்டும்.
இவ்விரு சமயங்களையும் இந்து சமயம் என்று ஆக்கியதன் மூலம் அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகள் நீர்த்துப்போகின்றன. அதாவது, சிவனியம், மாலியம் ஆகியவற்றை வைதிக மத கோட்பாடான சனாதனம் விழுங்கிவிட்டு மேலாதிக்கம் செய்கிறது என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் பாஜக உறுப்பினரும், இயக்குநருமான பேரரசு திருமாவளவனின் இந்த கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பேரரசு கேள்வி
இதுகுறித்துசெய்தியாளர்களிடம் கூறுகையில் திருமாவளவன் சொல்வதுபோல இந்து மதத்தை சைவம், வைணவம் என்று பிரித்துவிட்டு, தமிழகத்தை சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று பிரித்து விடுங்கள்.
மீண்டும் தெரு பெயர்களோடு சாதிப் பெயரையும் சேர்த்து விடுங்கள். சைவ, வைணவ காலத்தில் கிறிஸ்தவம், இஸ்லாம் இல்லை. சமூக நீதி வேண்டும் என்று முற்போக்காக பேசும் திருமாவளவனின் சிந்தனை அதைவிட பிற்போக்காக மாறிவிட்டது.
திருமா என்ன மதம்
திருமாவளவனிடம் சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை நேரடியாகவே கேட்கிறேன். நீங்கள் இந்துவா ? இல்லை என்றால் கிறிஸ்தவரா ? இல்லை, எனக்கு எந்த மதமும் இல்லை. நான் நாத்திகர் என்றால் அதையும் வெளிப்படையாக சொல்லுங்கள்
இந்து மதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதும், கேலி கிண்டல் செய்வதும் இருக்கட்டும். ஆ.ராசா, சீமான் ஆகியோரிடமும் இதையே கேட்கிறேன். நீங்கள் என்ன மதம் என்று தெரியாமல் இந்து மதத்தை இழிவுப்படுத்தக் கூடாது. இதுவரை பொறுத்துக் கொண்டோம். இனி பொறுக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.