சட்டரீதியாக சந்திக்க தயார் : சிறை தண்டனை குறித்து அறிக்கை விட்ட லிங்குசாமி

N. Lingusamy
By Irumporai Aug 23, 2022 03:23 AM GMT
Report

தன் மீது தொடரப்பட்ட வழக்கினை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாக இயக்குநர் லிங்குசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

செக் மோசடி வழக்கு

2014ல் நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் "எண்ணி ஏழு நாள்" படத்தை தயாரிப்பதற்காக, பி.வி.பி. பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக இயக்குனர் லிங்குசாமி கடனாக பெற்றார்.

சட்டரீதியாக சந்திக்க தயார் : சிறை தண்டனை குறித்து  அறிக்கை விட்ட லிங்குசாமி | Director Lingusamy Press Release For His Case

அப்போது லிங்குசாமி கொடுத்த 35 லட்சம் ரூபாய்க்கான காசோலைக்கு லிங்குசாமி வங்கி கணக்கில் பணமில்லாமல் திரும்பியதால் பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த 3வது விரைவு நீதிமன்றம், இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

சட்டரீதியாக சந்திக்க தயார்

இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ள லிங்குசாமி, ''இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னை பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை.

இந்த வழக்கு பிவிபி கேப்பிடல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது.

அவர்கள் தொடுத்த வழக்கின் மேல் இன்று மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நாங்கள் இன்று மாண்புமிகு நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக உடனடியாக மேல் முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.