ஆனந்தம் முதல் சண்டகோழி-2 வரை... 20 ஆண்டுகளை நிறைவுசெய்த லிங்குசாமி...
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குநராக திகழும் லிங்குசாமி 20 வருடங்களை நிறைவு செய்துள்ள நிலையில், பலரும் மலரும் நினைவுகளை ட்விட்டரில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்துவந்த லிங்குசாமி 2001 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி வெளியான ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். குடும்ப உறவை மையப்படுத்தி வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற சினிமா ஏரியாவில் கவனிக்கத்தக்க இயக்குனராக லிங்குசாமி மாறினார்.
தொடர்ந்து ரன்,ஜி, சண்டகோழி, பையா, பீமா, வேட்டை, அஞ்சான் சண்டகோழி-2 என ரசிகர்கள் விரும்பும் கமர்ஷியல் இயக்குநராக உருவெடுத்தார்.
நடுவில் தயாரிப்பாளராக தீபாவளி, வழக்கு எண் 18/9 , கோலி சோடா, மஞ்சப்பை, உத்தமவில்லன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார். இதனிடையே அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ரசிகர்கள் அவரது படங்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த 20 ஆண்டுகளில் என்னை ஆதரித்த எனது தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் அனைவரும் மற்றும் முக்கியமாக ஆர்.பி. சௌத்ரி சாருக்கு நன்றிகள்!. நாம் இப்போது இதைக் கொண்டாடக் கூடிய மனநிலையில் இல்லை. அனைவருக்காகவும் முதலில் பிரார்த்தனை செய்வோம் என தெரிவித்துள்ளார்.