நடிகர் திலீப்பிற்கு எதிராக இயக்குனர் பாலசந்திரகுமார் 6.30 மணி நேரம் ரகசிய வாக்குமூலம்
கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் 2017ஆம் ஆண்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அந்த வழக்கில் நடிகர் திலீப், பல்சர் சுனி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பல்சர் சுனி இப்போதும் சிறையில் உள்ளார். அதேசமயம் நடிகர் திலீப் 74 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு, ஜாமினில் வெளியே வந்தார்.
ஆனால் நடிகர் திலீப்பின் நெருங்கிய நண்பராக இருந்த சினிமா இயக்குநர் பாலசந்திரகுமார் தற்போது திலீபிற்கு எதிரான சாட்சிகளை சமர்ப்பித்து வருகிறார்.
நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தனது மனசாட்சி உறுத்துவதால் இதை வெளிப்படுத்துவதாக பாலசந்திரகுமார் கூறுகிறார்.
பாலசந்திரகுமார் ஒரு தனியார் தொலைக்காட்சியில் கடந்த மாதம் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதுதான் முதன் முதலாக திலீப் குறித்த சில தகவல்களை வெளியிட்டார்.
இந்த நிலையில் இயக்குநர் பாலசந்திரகுமார் நேற்று முன் தினம் கிரைம் பிரான்ச் போலீஸாரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அப்போது 20 டிஜிட்டல் ஆதாரங்களை ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. திலீப் உள்ளிட்டவர்கள் பேசும் ஆடியோ ஒரு டேபில் ரெக்கார்டு செய்து வைத்துள்ளார்.
அதில் திலீப், திலீபின் சகோதரன் அனூப், மவியின் தம்பி உள்ளிட்டவர்கள் பேசும் ஆடியோ உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று எர்ணாகுளம் ஜூடீசியல் மஜிஸ்திரேட் கோர்ட்டில் பாலசந்திரகுமார் ஆஜராகி 6.30 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த வாக்குமூலங்கள் 51 பக்கத்துக்கு பதிவு செய்யப்பட்டள்ளது. திலீபிடம் அறிமுகம் ஆனது முதல் அனைத்து விஷயங்களையும் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாகவும்.
இந்த விஷயங்களை வெளியே கூற காலதாமதம் ஆனதற்கான காரணம் குறித்தும் வாக்குமூலத்தில் கூறியதாக பாலச்சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
வரும் 20-ம் தேதிக்கு முன் முதற்கட்ட விசாரணை அறிக்கை கோர்ட்டுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால், நடவடிக்கைகள் துரிதகதியில் நடந்துவருகின்றன.