இந்திய அணியின் கேப்டனாக இவரை நியமியுங்கள் தினேஷ் கார்த்திக் வேண்டுகோள்
இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா ஆக்கவேண்டும் என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு துபாயில் துவங்கியது. இந்த டி.20 உலகக்கோப்பை தொடரை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் இந்திய அணியே முதன்மையான அணியாக பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய அணியோ இந்த தொடரில் மிக மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பாகிஸ்தான் அணியுடனான முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்திலும்,
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி போராட கூட முடியாமல் படுதோல்வியை சந்தித்தது.
இதனால் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதில் மிகப்பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான கதவுகள் கிட்டத்தட்ட அடைக்கப்பட்டதாகவே கருதப்பட்டது,
ஆனால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணிக்கு தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
உலகக் கோப்பை தொடர் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்க இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டை பிசிசிஐ நியமித்துள்ளது,
ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், இந்திய அணி இன்னும் கூடுதல் பலமாக வருங்காலங்களில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து விராட் கோலியும் டி20 தொடரில் இருந்து இனி கேப்டனாக செயல்பட மாட்டேன் என்று தெரிவித்ததன் காரணமாக அவருக்கு பதில் யாரை பிசிசிஐ கேப்டனாக நியமிக்க போகிறது என்ற கேள்வி கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் தற்போது பேசு பொருளாக உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ரோஹித் சர்மாவை இந்திய அணியின் கேப்டன் ஆக்குங்கள் என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் ரோஹித் சர்மாவை கேப்டனாக வேண்டும் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது அல்லது இரண்டு உலக கோப்பை தொடரிலாவது அவரை கேப்டனாக நியமிக்க வேண்டும்,
இந்திய அணியின் இளம் வீரர்களான ரிஷப் பண்ட் அல்லது கேஎல் ராகுல் ஆகிய இருவரில் ஒருவருக்கு கேப்டன் பதவியை கொடுக்கும் முன் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா தான் கேப்டனாக செயல்பட்ட போட்டிகளில் மிகச் சிறந்த முறையில் செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார் என்றும் தினேஷ் கர்திக் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.