கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடுவதற்கு இதுவே காரணம் - ரகசியத்தை சொன்ன தினேஷ் கார்த்திக்
கே.எல்,ராகுல் சிறப்பாக விளையாடுவதற்கு என்ன காரணம் என்பது குறித்த கருத்தை சக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.துணை கேப்டன் கே.எல்.ராகுலின் அபார சதத்தால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென்னாப்பிரிக்க மைதானத்தில் இவர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். இதற்கு முன்னர் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரிலும் மிகச் சிறப்பாக விளையாடி லார்ட்ஸ் மைதானத்தில் சதம் விளாசி வரலாறு படைத்தார். ஆசிய கண்டங்களுக்கு வெளியே கே.எல்,ராகுல் அடிக்கும் ஐந்தாவது சதம் இது என்பதால் அனைவரது கவனமும் அவர் பக்கம் உள்ளது.
தொடர்ந்து வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வெளிநாட்டு மைதானங்களில் கே.எல்,ராகுல் விளையாடும் விதம் குறித்து சக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார். அதில் கே.எல்,ராகுல் உள்ளூர் போட்டிகளில் விளையாடும்பொழுது பலமுறை நான் கவனித்திருக்கிறேன். அதிக அளவில் சிக்சர்கள் அடிக்கக்கூடிய வீரர். வேகப்பந்து வீச்சாளர்களை விளையாடுவதற்கு விரும்புவார்.
குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சில் கவர் திசை மற்றும லாங்-ஆன் திசை இரண்டிலும் அடிக்கடி சிக்சர்கள் அடிப்பார். உள்ளூர் போட்டிகளில் இது கைகொடுத்தாலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல நேரங்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் நம்மை ஏமாற்றி விக்கெட் எடுத்து விடுவர். 140, 145+ வேகத்தில் வரும் பந்தை எல்லா நேரமும் அடித்துவிட முடியாது. பல நேரங்களில் போல்டு ஆகிவிடுவோம்.
ராகுல் தான் பேட்டிங் செய்யும்போது நிற்கும் விதம், தலையை வைக்கும் விதம் மற்றும் தோள்பட்டை பகுதிகளை சிறிதளவில் திருப்பி நிற்பது என சிறுசிறு மாற்றங்களை செய்துகொண்டார். இவற்றின் மூலமாக பந்தை எதிர்கொள்வதற்கு அதிக அளவு நம்பிக்கை கிடைத்திருக்கிறது. எந்த பந்தை அடிக்க முடியும். எந்த பந்தை அப்படியே விட்டு விடலாம் என இறுதியில் கணித்து விடமுடியும். ஏனெனில் அவரது தலை பகுதி மிகவும் சீராகவும் கால்பகுதி பந்தை நோக்கி நகர்த்தவும் உதவும். இதன் காரணமாகவே சமீபகாலமாக நல்ல சராசரியில் கேஎல் ராகுல் விளையாடி வருகிறார்