"திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றிபெறும்" - தினேஷ் குண்டுராவ் உறுதி
தமிழகத்தில் திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணல்குண்டு, கடையனோடை, குளத்து குடியிருப்பு, தடியன் காலனி, தேமாங்குளம், தவசிநகர், முதலை மொழி, தங்கையா புரம், மானாட்டூர், செம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது வேட்பாளர் பேசுகையில், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 15 வருஷமா எம்எல்ஏவா இருக்கிறவர் தொகுதியின் வளர்ச்சிக்காக ஒன்றும் செய்யவில்லை. மூன்று முறை மினிஸ்டரா இருந்தும் அவர் மக்களுக்கு என்ன நல்லது செய்தார். தற்போது அவங்க கொடுக்கிற ஆயிரம் ரூபாய் நமக்கு ஒரு மாசத்துக்கு கூட வருவதில்லை. அதனால் நம்முடைய எதிர்காலத்தை நாம் விற்றுவிட வேண்டாம். உங்களோடு நான் இருப்பேன். தொகுதி மேம்பாட்டிற்காகவும் தொகுதி மக்களுக்காகவும் நான் உழைப்பேன் எனவும்,நான் உங்களிடத்தில் உறுதி கூறுகிறேன்.

அரசாங்கத்தின் நலத்திட்ட திட்ட பணிகளும் மேம்பாட்டு பணிகளும் எந்த ஊழலும் லஞ்சமும் இன்று மக்களை சென்றடையும். பத்தாண்டுகளாக எம்எல்ஏவாக இருந்தவர் சொத்துக்களை அதிகளவில் சேர்த்துள்ளார்.நான் சொத்து சேர்க்க அரசியலுக்கு வரவில்லை.தொகுதியில் உள்ள 25 மாணவர்களுக்கு எனது கல்லூரியில் ஆண்டுதோறும் இலவச பொறியியல் கல்வியை அளிப்பேன்.
தகுதி வாய்ந்த நபர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு அழைத்திட வேலை வாய்ப்பு முகாம் ஆண்டுதோறும் நடத்துவேன் என்றார் அவர். பின்னர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்.
ஏப்ரல் 3ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரியங்கா காந்தி தமிழகம் வருகிறார்.
அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்றார் அவர். இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன், ஆழ்வை ஒன்றிய செயலாளர் பார்த்திபன், மாவட்ட துணை அமைப்பாளர் செம்பூர் விஜயன், சி.பி.ஐ மாவட்ட துணை செயலாளர் கரும்மன், ஒன்றிய செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.