திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட திமுக வேட்பாளர்
தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்து பேச்சாளர் திண்டுக்கல் லியோனி பிரச்சாரத்தில் பேசும்போது, “நாட்டு மாடு பாலை குடிச்சு குடிச்சு தான் நம்ம பெண்கள் பலூன் மாதிரி ஊதி போய்ட்டாங்க.
ஒரு காலத்துல பெண்களுடைய இடுப்பு எட்டு மாதிரி இருந்தது. பிள்ளை இடுப்புல உட்கார்ந்து கொள்ளும். ஆனா... நாட்டு மாடு குடித்து பெண்கள் இடுப்பு என்று பேரல் மாதிரி ஆகியிடுச்சு... பிள்ளை இடுப்புல இருந்து வழுக்கிட்டு போகுது” என்று சிரித்தவாறு பேசினார். ஆனால், திண்டுக்கல் ஐ லியோனின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு தற்போது கிளம்பி இருக்கிறது.
பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக திண்டுக்கல் ஐ.லியோனி மீது, பெண் வழக்கறிஞர் சுபாஷினி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதனையடுத்து, திமுக எம்.பி. கனிமொழியும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில், அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது.
இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும் என்று கண்டனத்தை தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி, பிரச்சாரத்தின் போது திண்டுக்கல் லியோனி சொன்ன உதாரணத்திற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
நாட்டு மாட்டு பால் நல்லது என்று கூறி இருக்கலாம், அதை விடுத்து அந்த உதாரணம் தேவையற்றது என்று தெரிவித்துள்ளார்.