3 மணி நேரம் தண்ணீரில் மிதந்த உடல் உயிருடன் எழுந்து வந்ததால் அதிர்ச்சி அடைந்த போலீசார்

Police River Man Shocking Dindigul Drinks
By Thahir Jan 17, 2022 04:16 AM GMT
Report

திண்டுக்கல் அருகே மூன்று மணி நேரமாக மிதந்த உடல் திடீரென உயிருடன் எழுந்து வந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சுமை தூக்கும் தொழிலாளியான அலக்குவார் பட்டியைச் சேர்ந்த முருகவேல் என்பவர் திருச்சி புறவழிச்சாலையில் திருட்டுத்தனமாக விற்பனை செய்த மதுவை வாங்கி அதிகமாக குடித்துள்ளார்.

போதை காரணமாக நடக்க முடியாததால் சாலை ஓரத்தில் இருந்த ஓடை பாலத்தில் அமர்ந்தார். பின்னர் தடுமாறி ஓடையில் விழுந்துள்ளார்.

மது போதை அதிகமானதால் சுயநினைவை இழந்த முருகவேல் சுமார் மூன்று மணி நேரமாக தண்ணீரில் மிதந்துள்ளார். உடலில் எவ்வித அசைவும் இல்லை.

இதனையடுத்து அவ்வழியாக வந்த நபர் திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த உடலை மீட்பதற்காக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்கும் நடவடிக்தையில் ஈடுபட்டனர். அப்போது சற்று போதை தெளிந்த முருகவேல் சத்தம் போட்டார்.

தட்டுத்தடுமாறி பாலத்தின் அடியில் இருந்து மெதுவாக வெளியே வந்து தலையை நீட்டினார். இதனையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர்.

இறந்ததாக கருதப்பட்ட நபர் உயிருடன் பாலத்தடியில் இருந்து வந்த சம்பவம் அங்கிருந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.