ரோகித் சர்மா, விராட் கோலிக்கு இது சிக்கலாக அமையும் - முன்னாள் இந்திய வீரர் கணிப்பு
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வருகிற 18-ந்தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளது.
இந்த போட்டிக்கு முன்பு நியூசிலாந்து அணி இங்கிலாந்துடன் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா 4 செசன் பயிற்சி மட்டுமே மேற்கொள்ள இருக்கிறது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும் எனப் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் திலிப் வெங்சர்க்கார் கூறுகையில், ”இந்திய அணி ஐபிஎல் போட்டியில் விளையாடிய பின்னர் நேரடியாக டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இருந்தாலும் போதுமான அளவிற்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடாதது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்கள் சிறந்த பார்மில் இருந்தாலும் போதிய பயிற்சி இல்லாமல் களம் இறங்குவது பின்னடைவாகவே அமையும். நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
இந்தியா ஒன்றிரண்டு போட்டி பயிற்சி ஆட்டத்திலாவது விளையாடியிருக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாடினால், சூழ்நிலைக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக் கொள்ள சாதகமாக இருக்கும்.’’ என்றார்.