ஜடேஜா இல்லாததை நினைத்து வருத்தப்பட்ட தோனி - சோகத்தில் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா விலகியது தொடர்பான அந்த அணியின் கேப்டன் தோனி கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய 2022 ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் குஜராத் டைட்டன்ஸ் அணி சென்றுள்ளது. லக்னோ அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளதால் எஞ்சியுள்ள 2 இடங்களுக்கு 6 அணிகளுக்குள் போட்டி நிலவுகிறது.
முன்னாள் சாம்பியன்களான சென்னை, மும்பை அணிகள் முதல் அணிகளாக தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இதில் சென்னை அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. நேற்று மும்பையுடன் நடந்த ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியடைந்தது.
இதற்கிடையில் சென்னை அணியில் இருந்து காயம் காரணமாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நடப்பு தொடரில் இருந்து வெளியேறியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜடேஜா இல்லாத சென்னை அணி குறித்து கேப்டன் தோனி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், ஜடேஜா போன்ற ஒருவர் இல்லாதது வருத்தமாக உள்ளது. அவர் தான் அணியில் நிறைய காம்பினேஷங்களை எங்களுக்கு முயற்சி செய்து பார்க்க உதவினார். அவருக்கு மாற்று வீரரை தேடுவது கடினம். அவரை போன்று ஒருவரால் களத்தில் ஃபீல்டிங் செய்யவே முடியாது. எனக்கு தெரிந்து அவருக்கு மாற்று என்றும் யாரும் இல்லை எனவும் தோனி கூறியுள்ளார்.