சென்னை ரசிகர்களை ஏமாற்றிய தோனி - விழாவில் பங்கேற்க வாய்ப்பு இல்லை..!
சென்னையில் இன்று நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தோனி பங்கேற்க வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இன்று செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 28-ம் தேதி நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, போட்டியை தொடங்கிவைத்தார்.
தொடக்க விழாவில் தமிழர்களின் வரலாற்றை விளக்கி நடத்தப்பட்ட நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
அதைத் தொடர்ந்து 29-ம் தேதி முதல் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ரிசார்ட்டில் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில், 12 நாட்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நிறைவு விழா இன்று மாலை நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் அரங்கில் தீவிரமாக நடந்து வருகின்றன.
மாலை 5.30 மணிக்கு விழா தொடங்குகிறது. 6.30 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை கடந்த 10 நாட்களாக நடந்து வந்தது.
அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் கண்கவர் நிகழ்ச்சியாக நிறைவு விழா நிகழ்ச்சி அமையும் என்று விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தோனி பங்கேற்க வாய்ப்பில்லை
இந்த நிலையில் செஸ் போட்டியின் நிறைவு விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகின.
இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா குறித்த விளம்பரங்களில் அவரின் பெயர் இடம்பெறவில்லை.
இதையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் அவர் பங்கேற்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
தோனி பங்கேற்கவில்லை என அறிந்த அவரது ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.