‘இந்த மனுஷன் அப்போவே சொன்னாருப்பா...’ - சூசகமாக தனுஷுக்கு புத்திமதி சொன்ன செல்வராகவன் டுவிட்?
டுவிட் பதிவின் மூலமாக தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து இயக்குனர் செல்வராகவன் முன்பே சூசகமாக பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன்.
இவர் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் இவர்கள் இருவரும் இதுவரை காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள். அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘நானே வருவேன்’ படத்திலும் தனுஷ் தான் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இதுதவிர இவர்கள் இருவரும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். சினிமாவில் தனுஷை சிறந்த நடிகராக மெருகேற்றியதும் செல்வராகவன்தான்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நடிகர் தனுஷ், தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தார். 18 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்து பிரிவதாக திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். இதனால், கோலிவுட்டையே பரபரப்பானது.
இந்நிலையில், செல்வராகவன் கடந்த டிசம்பர் மாதம் போட்ட டுவிட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த டுவிட்டின் மூலம் தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து இயக்குனர் செல்வராகவன் முன்பே சூசகமாக பதிவில் கூறியுள்ளார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதன்படி கடந்த டிசம்பர் 3-ந் தேதி இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டிருந்த பதிவில், “தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். 2 நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
தனுஷ் - ஐஸ்வர்யா இருவருக்குமிடையே பிரச்சனை உச்சத்தில் இருக்கும் போது தான், செல்வராகவன் இவ்வாறு பதிவிட்டிருக்கக் கூடும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அந்த டுவிட்டை குறிப்பிட்டு ‘அப்போ புரியல... இப்போ புரியுது' என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.