குரூப் 1 தேர்விற்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு - ஹால் டிக்கெட்டை கிழித்தெறிந்து ஆவேசம்
குரூப் 1 தேர்வு எழுத தாமதமாக வந்த தேர்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தங்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டை கிழித்தெறிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குரூப் 1 தேர்வு
தமிழகத்தில் குரூப் 1 பிரிவில் 18துணை ஆட்சியா், 26துணைக் காவல் கண்காணிப்பாளா், 13வணிகவரி உதவி ஆணையா், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் என மொத்தம் 92 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கென 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வை எழுதுகின்றனர். காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். 9 மணிக்கெல்லாம் தேர்வு மையத்தில் தேர்வர்கள் இருக்க வேண்டும் என்பது விதிமுறை.

இந்த நிலையில் இந்த குரூப்-1 தேர்வினை எழுத பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள மையங்களில் தேர்வு எழுதுகிறார்கள்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏனாத்தூர் பகுதியில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
தேர்வுக்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அந்த தேர்வு மையத்தின் வாயிலில் உள்ள அலுவலர்களிடம் மன்றாடி பார்த்தனர்.
அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மன விரக்தியில் கையில் வைத்திருந்த ஹால் டிக்கெட்களை சிலர் கிழித்தெறிந்தனர்.

மேலும் ஒரு சில தேர்வர்களும் அவர்களது பெற்றோர்களும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
பொறுப்புள்ள பதவிக்கு தேர்வு எழுத வருகிறவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு தேர்வு மையத்துக்கு வந்தால் தான் பிற்காலத்தில் இவர்கள் பதவியில் அமரும் போது ஒழுக்க நிலையை கடைப்பிடிப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.