டெல்லியில் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
டெல்லியில் , கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, ஏப்., 20ம் தேதி முதல், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இன்று காலையுடன் ஊரடங்கு நிறைவு பெற இருந்தது.
இந்நிலையில், நிருபர்களிடம் முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது: டில்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளோம். ஆக்சிஜன் சப்ளை பிரச்னையாக இருந்தது. தற்போது நிலைமை மேம்பட்டு வருகிறது. ஆக்சிஜன் தேவை என அவசர செய்தி வருவதில்லை.டில்லியில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும், தடுப்பூசி போடும் பணி துவங்கி உள்ளது. இதற்காக பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
தடுப்பூசி போட்டுக் கொள்வதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கொரோனா பாதிப்பு குறைந்தாலும், கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் இப்போதைக்கு கருணை காட்டப்படாது. டெல்லியில், அமலில் உள்ள ஊரடங்கு, மே 17 வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த காலத்தில் மெட்ரோ ரயில்கள் இயங்காது. இவ்வாறு அவர் கூறினார்.
உ.பி.,யிலும் நீட்டிப்புமுதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில், கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, இன்றுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில், ஊரடங்கை, 17ம் தேதி வரை நீட்டித்து, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.