முடங்கியது டெல்லி..! பள்ளிகள், அலுவலகங்களை மூட உத்தரவு
டெல்லியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் சுத்திகரிப்பு நிலையங்களை சூழ்ந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மிதக்கும் டெல்லி
கடந்த சில நாட்களாக டெல்லி, இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் இமாசலபிரதேசத்தில் இருந்து தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் அரியானா மாநிலம் ஹத்னிகுண்ட் தடுப்பணையை அடைந்தது. அங்கிருந்து வினாடிக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி நீர், யமுனை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
யமுனை ஆற்றில் வேறு தடுப்பணையோ, அணையோ இல்லாததால் அந்த தண்ணீர் முழுவதும் டெல்லியை நோக்கி வந்தது. நேற்று முன்தினம் அதிகாலையில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர்மட்டம் 207.55 மீட்டரை எட்டியது.
இந்த நிலையில் டெல்லியின் குடியிருப்பு மற்றும் மார்க்கெட் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. டெல்லி வெள்ளத்தில் மிதக்க தொடங்கியது.
சாலைகள் மூடல்
மெட்ரோ ரயில் நிலையத்தின் அணுகுசாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் ரயில் நிலையத்தின் நுழைவாயிலும், வெளியேறும் வாயிலும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
வசிராபாத் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சென்று பார்வையிட்டார். இதனால் டெல்லியில் சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இதை கருத்தில் கொண்டு, சிங்கு எல்லை, படார்பூர் எல்லை, லோனி எல்லை, சில்லா எல்லை ஆகியவை வழியாக டெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைவதற்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது.