டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு - சோனியா காந்தியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த திமுக எம்.பிக்கள்
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் செய்கிறார்.
டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் திமுகவின் கட்சி அலுவலகம் கட்ட கடந்த 2013ம் ஆண்டு இடம் ஒதுக்கப்பட்டது. மத்திய அரசு உறுதி அளித்த நிலையில், திமுகவின் அலுவலகம் டெல்லியில் கட்டப்பட்டு வந்தது.
டெல்லியில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு அருகில் திமுக அலுவலக கட்டுமான பணிகள் நடந்தது வந்தன. தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது.
இதனையடுத்து, வரும் ஏப்ரல் 2ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இதற்காக 3-வது முறையாக டெல்லிக்கு செல்ல உள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு தமிழக எம்பிக்கள் நேரில் அழைப்பு விடுத்துள்ளனர். தமிழக எம்.பிக்கள் தி.ஆர் பாலு, ஆ.ராசா உள்ளிட்ட எம்பிக்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.