என்னது காற்று மாசுக்கு பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகள் தான் காரணமா? உ.பி அரசின் பதிலால் கடுப்பான நீதிபதி
காற்று மாசுக்கு பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகள் தான் காரணம் எனக் கூறிய வழக்கறிஞரிடம், பாகிஸ்தானில் உள்ள தொசிற்சாலைகளை மூட உத்தரவிடலாமா?? என உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.
டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு மோசமாக உள்ளது, இந்த காற்று மாசினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நான்கு வாரங்களாக விசாரித்து வருகின்றார்.
இந்த நிலையில், நேற்று நடந்த விசாரணையின்போது டெல்லி, என் சி ஆர் பகுதியில் அதிகரித்து வரும் காற்று மாசை குறைக்க 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காற்று தர மேலாண்மை அமைப்பு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் உத்தர பிரதேசத்தில் கரும்பு ஆலைகள் தொடர்ந்து இயங்குவதாலும் மாசு ஏற்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் உத்தரபிரதேச அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதாடினார் . அப்போது கூறிய அவர் டெல்லி, என்சிஆர் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுக்கு பாகிஸ்தானிலுள்ள தொழிற்சாலைகள் தான் காரணம். காற்று மாசுக்கும் உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள தொழிற்சாலைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, அப்படியெனில் பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளை மூட உத்தரவிடலாமா என கிண்டல் தொனியில் கேள்வியெழுப்பினார். மேலும் உங்கள் குறைகளை காற்று தர மேலாண்மை ஆணையத்திடம் தெரிவியுங்கள், அவர்கள் தீர்வு வழங்குவார்கள் என்று கூறினார் .