முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏன்? சீமான் கேள்வி
சென்னை ஆலம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வாக்கினை பதிவு செய்தார். 234 தொகுதிகளிலும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், சென்னை ஆலம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வாக்குப் பதிவு இயந்திர முறையை கைவிட்டு, வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும். பல இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது.
ஆனால், பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் கண்டுக்கொள்ளவில்லை. தேர்தலில் ஓட்டுக்காக பணம் கொடுக்கும் வேட்பாளர்களுக்கு 10 ஆண்டுகள் தடை விதித்தால் தான் ஒரு பயம் வரும். தேர்தல் நடத்தும் முறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும். டிஜிட்டல் இந்தியா என கூறிக்கொண்டால் மட்டும்போதாது.
ஓட்டளிக்கும் முறையை இயந்திரமாக மாற்றிவிட்ட நிலையில், தொழில்நுட்பத்தை கையாண்டு முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஏன்? ஓட்டு எண்ணும் பணிகளை விரைவாக செய்ய வேண்டும். அமெரிக்கா போல, ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக எண்ணப்பட்டு முடிவு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.