குடிநீர் தொட்டியில் மலம் கலந்த மர்ம நபர்கள் - தண்ணீர் பருகிய குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு
மலம் கலந்த குடிநீரை பருகிய குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடிநீர் தொட்டியில் மலம் கழித்த மர்ம நபர்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் வேங்கைவயல் என்ற கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அங்கிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குடிநீர் தொட்டியில் இருந்து வரும் குடிநீரை பருகிய குழந்தைகளுக்கு கடந்த சில நாட்களாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து குழந்தைகள் 5 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து குழந்தைகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குடிநீரில் பாதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் குடிநீரை சோதனை செய்து பார்த்த போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கழித்துவிட்டு சென்றது தெரியவந்துள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கிராம மக்கள் உடனடியாக அன்னவாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீசார் விசாரணை
தகவலை அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் குடிநீர் தொட்டி மீது ஏறி பார்க்கும் போது மலம் கழித்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து தொட்டியில் இருந்த தண்ணீரை அப்புறப்படுத்திவிட்டு தண்ணீரை மாற்றியுள்ளனர். இந்த இழிவான சம்பவத்தில் ஈடுபட்ட நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது பற்றி அறிந்த கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை நேரில் ஆய்வு செய்தார்.
மேலும் தொட்டியை சுத்தம் செய்ய அவர் ஊராட் மன்ற ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.