திறமைக்கு அங்கீகாரம்; டி.எஸ்.பி.யான இந்திய கிரிக்கெட் வீராங்கனை - குவியும் வாழ்த்து!
இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா துணைக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தீப்தி ஷர்மா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக ஜொலித்து வருபவர் தீப்தி ஷர்மா. உத்திர பிரதேசத்தை சேர்ந்த இவர் 2014ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
இதுவரை 194 போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும், பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் தீப்தி ஷர்மா வென்றுள்ளார்.
அங்கீகாரம்
மேலும் இவர் டி20 சர்வதேசப் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையை சமீபத்தில் படைத்தார்.
கடந்த டிசம்பர் 2023ம் ஆண்டு ஐ.சி.சி.யின் சிறந்த வீராங்கனை விருதும் தீப்தி ஷர்மாவுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் அவரின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் உத்தரப் பிரதேச மாநில அரசு அவரை துணைக் காவல் கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி.) நியமித்துள்ளது.
மேலும், அவருக்கு விருது மற்றும் ரூ. 3 கோடி ரொக்கப்பரிசும், அவரின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பணி நியமன கடிதத்தையும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வழங்கினார். தற்போது தீப்தி ஷர்மாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.