இந்து நாடாக அறிவிக்காவிட்டால் அப்புறம் இருக்கு : பிரதமர் மோடியினை எச்சரிக்கும் பிரபல சாமியார்
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியின் தபஸ்வீ மடத்தின் சாமியாராக இருப்பவர் ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்யா மகாராஜ். இவர், 3 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இதன்மூலம் சற்று பிரபலமான இந்த சாமியார் கடந்த ஆண்டு மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். இதன்போது அவர், அயோத்தியின் ராம் ஜானகி கோயிலின் முன்பு அமர்ந்தவாறு "இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

15 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்ட அவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமாக அதனை நீட்டித்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரை சந்தித்ததையடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
இந்த நிலையில் சாமியார் ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்யா மகாராஜ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், வரும் அக்டோபர் 2ம் தேதிக்குள் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காவிட்டால், நான் சரயு நதியில் ஜல சமாதி அடைவேன்.
அத்துடன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் தேசியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறினார்.