அடுத்த லிஸ்ட் ரெடி , மேலும் 54 சீன செயலிகளை தடை செய்ய இந்திய அரசு முடிவு
இந்தியாவில் 54-க்கும் மேற்பட்ட சீன ஆப்களை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் 54-க்கும் மேற்பட்ட சீன ஆப்களை தடை செய்ய மத்திய அரசு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த செயலிகளில் பல பெரிய சீன தொழில்நுட்ப நிறுவனங்களான டென்சென்ட், அலிபாபா மற்றும் கேமிங் நிறுவனமான நெட்ஈஸ் ஆகியவை உள்ளது.2020 இல் இந்தியா விதித்த தடைக்குப் பிறகு, இந்த நிறுவங்களின் செயலிகள் மறுபெயரிடப்பட்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
பியூட்டி கேமிரா, ஸ்வீட் செல்ஃபி எச்டி, விவா விடியோ எடிட்டர், ஆப் லாக், டூயல் ஸ்பேஸ் லைட் உள்ளிட்ட செயலிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செயலிகளை தடை செய்யுமாறு கூகுளின் ப்ளே ஸ்டோர் உள்ளிட்ட முக்கிய ஆப் ஸ்டோர்களுக்கும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது என கூறப்படுகிறது.
கடந்த ஜூன் 2020 இல் சீன நிறுவனங்களின் செயலிகளை இந்தியா முதலில் தடை செய்தது. கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி நள்ளிரவு இந்தியா-சீன படைகள் இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது.
கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருடன் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த மோதலில் 40 சீன ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.
இதனால், கடந்த 2020 ஜூன் 29-ம் தேதி டிக்டாக் உள்பட 58 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் மேலும் பல சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்தியாவில் இதுவரை 200-க்கும் மேற்ப்பட்ட செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. முதன் முதலாக டிக்டாக், ஷேரிட், வீசாட், ஹெலோ, யுசி நியூஸ், பிகோ லைவ், போன்ற பிரபலமான செயலிகளை இந்திய அரசு தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: