கடனில் சிக்கி தவிக்கும் விஜய் சேதுபதி..வாங்குற சம்பளம் கடனை அடைக்கவே சரியா இருப்பதாக வேதனை
திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.
இதற்காக நடைபெற்ற விழாவில் விஜய் சேதுபதி பேசும் போது, "இந்த திட்டத்திற்கு உதவும்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்தத் தருணத்தில் மேன் கைண்ட் மற்றும் காசா கிராண்ட் ஆகிய நிறுவனங்களின் விளம்பரத்தில் நடித்தேன். அதில் கிடைத்த ஊதியத்தை ஆர்.கே.செல்வமணியிடம் கொடுத்துவிட வேண்டும் என முடிவு செய்தேன்.
ஏனெனில், ஒவ்வொரு முறையும் பணம் வரும்போதெல்லாம் ஏதேனும் கடன்காரர்களுக்கு கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கே சரியாகிவிடுகிறது.
என்னுடைய உதவியை ஒரு கோடி ரூபாயுடன் நிறுத்திக்கொள்ளும் எண்ணம் இல்லை. தொடர்ந்து இந்தத் திட்டத்திற்கு என்னால் ஆன உதவிகளைத் தொடர்ந்து செய்வேன்.
நான் திரைத்துறைக்கு வருவதற்கு முக்கியமான காரணம் என் தந்தையின் 10 லட்சம் ரூபாய் கடன்தான். சிறிய வயதில் எனக்கு திரைப்படம் பார்க்கும் பழக்கமெல்லாம் இல்லை.
துபாய்க்கு சென்று சம்பாதித்து கடனை அடைத்துவிடலாம் என நினைத்தேன். அங்கு சென்று சம்பாதித்து, வட்டியை மட்டும்தான் கட்டினேன்; அசலைக் கட்ட முடியவில்லை.
அதன் பிறகு வீட்டு வாடகை. இருபதாம் தேதி ஆனவுடன், அடுத்த மாதம் எப்படி வீட்டு வாடகை கொடுக்கப் போகிறோம் என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும்.
அதன்பிறகு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் வீட்டு உரிமையாளர்கள் திடீரென்று வீட்டு வாடகையை உயர்த்தி விடுவார்கள். என்ன கணக்கு என்று தெரியாது.
விலைவாசி உயர்வை விட, வீட்டு வாடகை உயர்வுதான் அதிகம். இதுதான் பதற்றத்தை ஏற்படுத்தும். இதனால், எப்பாடுபட்டேனும் ஒரு சொந்த வீடு வாங்கிவிட வேண்டும்.
அப்பாவின் 10 லட்சம் ரூபாய் கடனை அடைத்துவிட வேண்டும். இந்த இரண்டு விஷயத்திற்காகத்தான் சினிமாவில் நடிக்கத் தொடங்கினேன்.
இங்கு வந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்துடன்தான் நுழைந்தேன். இப்படித் தெரியாமல்தான் சினிமாவில் நடிக்கத் தொடங்கினேன்.
திட்டமிட்டு நடிக்க வரவில்லை. அப்படி ஒரு ஆசையும் இருந்ததில்லை. வீட்டு வாடகை என்பது மிகப்பெரிய பாரம். சில இடங்களில் ஏதோ பாகிஸ்தானில் குடியிருக்கிறோம் என்ற உணர்வு வரும்.
வீட்டு உரிமையாளர்கள் விதிக்கும் நிபந்தனைகள் அப்படி இருக்கும். நான் நடித்த 'ஆண்டவன் கட்டளை' படத்தில் இடம் பெற்றது போல், துணி காயப் போடக்கூடாது.
சுவரில் ஆணி அடிக்கக் கூடாது. இப்படிப் பலப்பல புதிய புதிய நிபந்தனைகள் இருக்கும். உறவினர்கள் வரக்கூடாது. வந்தால் உடனடியாக திரும்பிச் செல்ல வேண்டும்.
அவர்கள் இங்கு குளிக்கக் கூடாது என ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதிப்பார்கள். அதனால் சொந்த வீடு கனவு என்பது எல்லா தொழிலாளர்களுக்கும் இருக்கும் ஒரு கனவு. அந்தக் கனவு. அந்த ஆசை. இன்று நிறைவேறத் தொடங்குகிறது.
கண்டிப்பாக இந்தக் கனவை என்னால் மட்டும் சுமக்க இயலாது. ஏனெனில் இதற்காகச் செல்ல வேண்டிய தூரம் அதிகம். அதனால் இந்த திட்டம் சிறப்பாகத் தொடங்கி, சிறப்பாக நிறைவடைய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
இந்தக் கனவுத் திட்டத்தை நிறைவேற்றும் கட்டுமான நிறுவன உரிமையாளர் சுரேஷ்பாபு அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களுடைய தொழிலாளர்களின் வீட்டைத் தலைமுறை தலைமுறையாக உறுதியுடன் இருக்கும் வகையில் கட்டித் தரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இதற்காக எந்த சமரசத்தையும் மேற்கொள்ளாமல், தரமாக கட்டித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என விஜய் சேதுபதி பேசினார்.