படிப்பில் முதலிடம்... : பொறாமையில் சக மாணவியின் தாய் கொடுத்த விஷம் - மாணவன் பரிதாப பலி - அதிர்ச்சி சம்பவம்

Death
By Nandhini Sep 04, 2022 05:36 AM GMT
Report

படிப்பில் போட்டி காரணமாக பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுக்கப்பட்டதால், மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

படிப்பில் முதலிடம்

காரைக்கால், நேரு நகர், ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி மாலதி. இவர்களுக்கு 2வது மகன் பால மணிகண்டன் (13). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் படிப்பிலும், விளையாட்டிலும் பால மணிகண்டன் முதல் மாணவனாக வலம் வந்தார்.

மயங்கி விழுந்த மாணவன்

இந்நிலையில், பள்ளியில் ஆண்டு விழா நடைபெற உள்ளதால் பால மணிகண்டன் கலை நிகழ்ச்சி ஒத்திகையில் கலந்து கொண்டுள்ளான். பள்ளியில் ஒத்திகை நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய பால மணிகண்டனுக்கு திடீரென வாந்தி எடுத்துள்ளான்.

இதனால், மயங்கி மணிகண்டன் சுருண்டு கீழே விழுந்துள்ளான். இதைப் பார்த்து பதறிப் போன பெற்றோர்கள் மணிகண்டனை உடனே மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உடனே இது தொடர்பாக பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

பள்ளியிலிருந்து வந்த என் மகன் இப்படி மயங்கி விழுந்துள்ளான். என்ன நடந்தது என்று பள்ளிநிர்வாகத்திடம் பெற்றோர்கள் முறையிட்டனர். பின்னர், பள்ளி நிர்வாகம் பள்ளியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தது. அப்போது, பால மணிகண்டனுடன் படிக்கும் சக மாணவி அருள்மேரியின் தாய் சகாயராணி விக்டோரியா, பள்ளி வாட்ச்மேன் தேவதாஸ் என்பவரிடம் வெள்ளை நிற பையில் 2 கூல்ட்ரிங்ஸ் பாட்டி கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

death - student

விஷம் கொடுத்த சக மாணவி பெற்றோர்

அப்போது, வாட்ச் மேனிடம் பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தியபோது, சகாயராணி விக்டோரியா என்னிடம் வந்து 8ம் வகுப்பில் படிக்கும் பால மணிகண்டனிடம் அவரது உறவினர் கொடுக்கச் சொல்லியதாக கூறி கொடுத்து விட்டு சென்றார் என்று வாட்ச் மேன் கூறியுள்ளார்.

இதனையடுத்து, பாலமணிகண்டனின் பெற்றோர் காரைக்கால் காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சகாயராணி விக்டோரியாவிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பள்ளி வகுப்பில் பால மணிகண்டனுக்கும், மாணவி அருள் மேரிக்கும் படிப்பில் போட்டி இருந்தது.

எப்போதும் பால மணிகண்டன் முதல் மாணவனாக வந்தது மாணவி அருள் மேரிக்கு பிடிக்கவில்லை. இதனால், மாணவி அருள் மேரியும், தாய் விக்டோரியாவும் பால மணிகண்டன் மீது கோபத்தில் இருந்து வந்துள்ளனர். இதனையடுத்து, பள்ளியில் நடைபெற இருக்கும் கலை நிகழ்ச்சியில் பால மணிகண்டன் பங்கேற்க கூடாது என்று எண்ணிய விக்டோரியா, விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சித்தது விசாரணையில் தெரியவந்தது.

பரிதாபமாக உயிரிழந்த மாணவன்

இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த பால மணிகண்டன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து மாணவியின் தாயார் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்த கைது செய்துள்ளனர். மேலும் மாணவர் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடியதுடன், போராட்டத்திலும் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.