ஆப்ரேசன் தியேட்டரில் பிறந்த குழந்தையும், தாயும் உயிரிழந்த பரிதாபம் - கதறிய உறவினர்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின் போது குழந்தை பிறந்து உயிரிழந்த நிலையில் தாயும் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குழந்தையும், தாயும் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வ.புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் - அரங்கநாயகி தம்பதி. பிரசவத்திற்காக மனைவி அரங்கநாயகியை கணவர் ராம்குமார் மற்றும் உறவினர்கள் அருகில் உள்ள வ.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு காலை 6.10 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளது.
இதை தொடர்ந்து தாய்க்கும் உடல் நிலை மோசமடைந்துள்ளது. இதனால் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உறவினர்கள் போராட்டம்
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு கதறி துடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அரங்கநாயகிக்கு மருத்துவர்கள் யாரும் பிரசவம் பார்க்கவில்லை என்றும் ஒரு செவிலியர் மட்டுமே பிரசவம் பார்த்ததாக குற்றம் சாட்டினர்.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.